Saturday 29 November 2008

ஒற்றை நாற்று நடவு முறை

நெல்லில் ஒற்றை நாற்று நடவு முறை என்பது,அதிக இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரே ஒரு நாற்று மட்டும் நடவு செய்வதே ஆகும்.இதனை "திருந்திய நெல் சாகுபடி முறை" என்றும் அழைக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

  • விதை நெல் தேவை மிக மிக குறைவு.
  • அதிக இடைவெளியில் நடும் போது பயிறுக்கு தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
  • காய்ச்சலும்,பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுவதால் நீரின் தேவை மிக மிகக் குறைவு.
  • இயற்கை வழி விவசாயம் செய்வதால்,ரசாயன உரத்தின் தேவை இல்லை.
  • ரசாயன உரம் பயன்படுத்தாததால் இடுபொருள் செலவு மிகவும் குறைகிறது.
  • இயற்கை வழி விவசாயம் செய்வதால்,விளைபொருளான நெல்லின் தரம் நல்லதாக இருக்கும்.
  • இயற்கை வழி விவசாயம் செய்வதால்,நிலத்தின் தன்மை மாசு படாமல் இருக்கும்.
  • நடவு வேலை குறைவு.
  • மொத்ததில் குறைவான செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.
நடவு செயும் முறை
  • விதை நெல் தேர்வு.
  • 7-15 நாட்கள் வயதுள்ள இளம் நாற்று.
  • ஒற்றை நாற்றாக நடவு.
  • நாற்றங்காள் பராமரிப்பு.
  • நில மேம்பாடு
  • நாற்று பறித்து,நடவு செய்வ்து.
  • இடைவெளி
  • காய்ச்சலும்,பாய்ச்சலுமான நீர்ப்பாய்ச்சல்.
  • களை எடுத்தல்.
  • இயற்கை உரம் இடுதல்
  • அறுவடை
விதை நெல் தேர்வு

30-35 kg/ஏக்கர்.(நடவு முடிந்த பின் 100g விதை நெல்லை எடுத்து வைக்கவும்.நடவு செய்யும் போது,நாற்று வீணாயிருந்தால் பயன்படுத்தலாம்.

நாற்று பரித்தல்

7-15 நாட்கள் வயதுள்ள இளம் நாற்று(2,3 கிளைப்புகள் வந்த்தது)களை பிடுங்கி நடுவது.

இடைவெளி 50cm,50cm.அதிக இடைவெளி விடுவதால்,சூரிய ஒளி பயிர்களின் மீதுப் படுவதால்,வேர்த்தொகுதி நன்கு வளரும்.ஒ.நா.ந. முறையில் அதிக கிளைப்புகள் உள்ள தூர்கள், ஆழமான, அகலமான வேர்த்தொகுதிகள் ஆகியவை உருவாகின்றன.அதிக இடைவெளியில் எலித் தொந்தரவு குறைகிறது. சிலவகைப் பூச்சித் தாக்குதல்களும் குறைகிறது. நாற்றங்காள் பராமரிப்பு

நடவு வயலின் மேட்டுப் பகுதியில் 2m உயரம்,1m அகலம்,5m நீளம் கொண்ட எட்டு நாற்று மேடைகளை அமைக்கவும்.(1ஏக்கர் நடவுக்கு 40சதுரமீட்டர் நாற்றங்காள் தேவை.அந்த மேடைகளில் மெல்லிய பாலித்தீன் பேப்பர் பரப்பி,அதன் மேல் வயல்மண் மற்றும் குப்பைகளை பரவ வேண்டும்.முளை கட்டிய விதைகளை அதன் மீது பரப்ப வேண்டும்.
பாலித்தீன் பேப்ப்ர் இல்லாமல் செய்தால்,விதைகளை சேற்றில் தெளித்து மேடையை சுற்றி பள்ளங்களில் நீர்கட்டி வைக்க வேண்டும்.

நில மேம்பாடு

தண்ணீர் விட்டு,2 உழவு ஓட்டி 7 நாட்களுக்கு நிலத்தைக் காயப்போட வேண்டும்.களை இருந்தால் மீண்டும் இரண்டு உழவு ஓட்டி,7 நாட்களுக்கு நிலத்தைக் காயப்போட வேண்டும்.களை அதிகம் வராது.பின் 4டன் தொழு உரம் போட வேண்டும்.

நாற்று பறித்து,நடவு செய்வ்து

நாற்றைப் பறித்து நடுவதற்குப் பதிலாக, மேட்டுப்பாத்தியில் இருந்து நாற்றைச் சேற்று மண்ணோடு பெயர்த்து எடுத்து நடவும். சேற்றுக்கட்டியில் உள்ள நாற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து மண்ணுடன் எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, நாற்று பறிப்பதற்கும் நடவு செய்வதற்கும் கால இடைவெளி விநாடிகளாக குறைந்துவிடுகிறது. இப்படி செய்யும்போது நாற்றுப் பச்சைப் பிடித்து, உயிர்ப் பிடிப்பது உடனேத் தொடங்கிவிடுகிறது.

மேல் நடவு செய்வது

தரைமட்டத்தில் இருந்து 1 செ.மீ. - 2 செ.மீ. ஆழத்தி லேயே நடவு செய்ய வேண்டும்.நடவு 14வது நாள் 25cm,25cm இடைவெளி யில் நடவும்.இதற்கு குறியிடும் உருளை என்ற கருவி கொண்டு சரியாக நடலாம். இப்படி செய்வதால் நாற்றின் வேர் நுனி, வளைந்து ஆகாயம் பார்க்காமல் இருக்கும். தரைக்குள் வேரோட்டம் சீக்கிரம் நடக்கும்.நெல்லில் வேரும், தண்டும் இணையும் கிண்ணப் பகுதி எந்த அளவுக்கு தரைமட்டத்தை ஒட்டி, காற்று படும் இடத்துக்கு அருகில் இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கிளைப்புகள் இருக்கும். இந்தக் கிண்ணப்பகுதியில் இருந்து இப்பகுதியில் உள்ள செல்களுக்கு காற்று - உயிர்க்காற்று தாராளமாகக் கிடைத்து, கிளைப்புகள் அதிகமாகின்றன.

காய்ச்சலும்,பாய்ச்சலுமான நீர்ப்பாய்ச்சல்

காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்யும் போது வேருக்குப் போதுமான உயிர்க்காற்று கிடைப்பதுடன், மண்ணுக்குள் ஏற்படும் ரசாயன, உயிரியல் மாற்றங்கள் வளர்ச்சியைத் தூண்டி விடுகின்றன. இதனால் ஆழமான, அகலமான வேர்த்தொகுதி உருவாகிறது. அதிக விளைச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.

வயலின் மேல் மண்ணில் மயிரிழை போன்ற நுண்ணிய, மெல்லிய வெடிப்புகள் வரும் வரை நிலத்தைக் காயவைக்க வேண்டும். இவ்வெடிப்பு தெரிந்த பின்னர் மெல்லிய படலம் அளவுக்குத் தண்ணீர் தேங்கவிட்டால் போதும்.நடவு முடிந்த ஓரிரு வாரம் வரை நிலத்தைக் காயவிடாமல் வைக்கும்போது நிறைய கிளைப்புகள் வருகின்றன.பால் பிடிக்கும் பருவம் தொடங்கிய பிறகு நிலத்தை காயவிடக்கூடாது. காகித கணத்துக்கு தண்ணீர் நிறுத்திவைப்பது அவசியம்.தண்ணீரை வடித்து விடமுடியாத சூழலில் ஒ.நா.ந. முறையின் முழுப்பலன்களைப் பெற முடியாது. இந்த மாதிரி இடத்தில் ஒரு நாற்றுக்குப் பதிலாக 2-3 இளவயது நாற்றுகளை நடவு செய்கின்றனர்.

ஒற்றை நாற்றாக நடவு

ஒரே ஒரு நாற்றுதான் சிறந்தது.சூரிய ஒளியை அறுவைடை செய்வதும்,ஊட்டங்களைப் பெறுவதும் முழுமையாக இருக்கும்.தண்ணீரை வடித்து நிலத்தைக் காயப்போட இயலாத பகுதிகளில் விவசாயிகள் 2-3 நாற்றுகளையும் நடவு செய்கிறார்கள்.வேருக்குக் காற்றோட்டம் குறைவதால் வேர் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும். ஆதலால் 2-3 நாற்றுகளை நடுகிறார்கள்.

களை எடுத்தல்

களைகள்அதிகம் வரும்.களைகளைக் கைகளில் பிடுங்குவதை விட, களைகளை 10-15 நாட்களுக்குள் மண்ணுக்குள் அழுத்திப் புதைக்க எளிய, சிறிய கருவிகளை உருவாக்கி யுள்ளனர். பல்வேறு வகையான நிலத்தின் தன்மைகளுக்கு ஏற்ப அவை கிடைக் கின்றன.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது 'கோனோ' களைக்கருவி. நடவு முடித்த 10-15-வது நாளிலேயே இக்கருவியை நாற்றுகளுக்கு இடையே உருட்ட வேண்டும். களைகள் உள்ளே அழுத்தப்படுவதுடன், காற்று அதிகம் உள்ள மேல் மண் உள்ளே தள்ளப்பட்டு, கீழ் மண் மேலே வந்துவிடும். இப்படிக் கிளறி விடும்போது வேர்கள் தூண்டப்பட்டு கிளைப்புகள் தூண்டலைத் துரிதப்படுத்துகின்றன.
'கோனோ' களைக்கருவி இல்லை என்றால், சிறு களைக்கொட்டு கொண்டு கீறியும் விடலாம். மண்ணைப் புரட்டுதல் என்பதுதான் முக்கியம்.

இயற்கை உரம் இடுதல்

ஏக்கருக்கு சுமார் 1 முதல் 2 டன் குப்பை எருவே போதும். அமிர்தக்கரைசலை நீரோடு சேர்த்துவிட வாய்ப்பிருந்தால் 10 நாட்களுக்கு ஒருமுறை விடலாம். அல்லது இலை வழி உணவாக 10 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரலாம்.
அமிர்தக்கரைசலைப் போல, மீன்அமினோ அமிலம், பஞ்சகவ்யா எனப் பலவும் உள்ளன. அவைகளில் ஏதாவது ஒன்றை கூட தெளிக்கலாம்.வயலின் வாய்மடையில் 1 X 1 X 1 அடி அளவுள்ள குழி எடுத்து, நெய்வேலி காட்டா மணக்கு, எருக்கு போன்றவற்றின் இலை, தழைகளை சிறிது சாணத்துடன் கலந்து பழைய துணி அல்லது சாக்கில் கட்டிப்போடவும். நீர், இக்குழியில் விழுந்து பின் வயலுக்குள் பரவும் போது, சத்துக்கள் கொண்ட நீராக இருக்கும். 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை இலை, தழைகளை மாற்றினால் போதும். இந்த முறையில் நடவு செய்யப் பட்ட வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும் காலத்தில் காற்று தேவைப் படாத நுண்ணியிரிகள் பெருகி வளரும். நிலத்தைக் காயவைக்கும் போதும், களைக்கருவி கொண்டு மண்ணைப் புரட்டிப் போடும் போதும் மண்ணுக்குள் உயிர்க் காற்றின் அளவு அதிகரிக்கிறது. அப்போது அந்த நுண்ணியிரிகள் மடிந்து காற்று தேவைப்படும் நுண்ணியிரிகள் பெருகுகின்றன. மடிந்த நுண்ணியிரிகள் பயிருக்கு ஊட்டமாகின்றன. மீண்டும் தண்ணீர் பாய்ச்சும் போது காற்றுத் தேவைப்படும் நுண்ணியிரிகள் மடிந்து ஊட்டமாக மாறுகின்றன. காற்றுத் தேவைப்படாத நுண்ணியிரி கள் பெருகுகின்றன. இப்படி நடைபெறும் சுழற்சியே நெல் பயிருக்குத் தேவைப்படும் ஊட்டங் களைத் தந்து விடுகின்றன. எனவே ரசாயன உரங்கள் இல்லாமலேயே நெல் நிறைய விளைகிறது.
களைக்கொல்லிகளும் தேவை இல்லை. அவை பயன்படுத்தப்பட்ட நிலத்தில் விளைச்சல் குறைவதை விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.மூலிகைப்பூச்சி விரட்டியைப் பயன்படுத் தினால் வந்த நோய் தீரும். வரும் நோயைத் தடுக்க, பஞ்சகவ்யா உதவுகிறது.

மூலிகைப்பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகவ்யா தெளிக்க்கும் முறைகள்:
  • ஜீவாமிர்தம்-15-ம் நாள்-200lit/ஏக்கர்(பாசன் நீருடன் கலந்து விட).15 நாள் இடைவெளியில் இதனை 3முறை விடவும்.
  • பஞ்சகாவியா-30-ம் நாள்-30lit/ஏக்கர் நீருடன் கலந்து தெளிக்கவும்.5 நாள் இடைவெளியில் இதே போல் 3முறை தெளிக்கவும்.
  • நடவு முடிந்து 36ம் நாள் இயற்கை பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும்.பிறகு ஜீவாமிர்தம் 2முறை விடவும்.
மகசூல்

வெளி இடுபொருட்கள் எதுவும் தேவையில்லை. ஆகவே முட்டுவளிச் செலவு குறைகிறது.குறைந்த விதை நெல் மூலம் நம்பமுடியாத வளர்ச்சி, கிளைப்புகள், தூர்கள், நீளமான கதிர்கள், அதிக எடையுள்ள மணிகள் கிடைக்கிறது.மொத்தத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும்.

No comments: